Sunday, June 24, 2012

தமிழ் இலக்கிய வரலாறு

   லக்கு + இயம் = இலக்கியம். இலக்கினை உடையது இலக்கியம்.இலக்கியத்திற்கு "நூல்' என்னும் மற்றொரு பெயரும் உண்டு. கட்டடம்கட்டும்பொழுது கோணல்களைக் கண்டு ணர்ந்து சரி செய்ய "நூல்' இட்டுப்பார்ப்பது மரபு. அதுபோல் தனிமனித, சமுதாய அளவி லுள்ள சிக்கல்களையும் காரணங்களையும் சுட்டிக் காட்டித் தீர்வுகளுக்கு வழிவகுக்கும் புத்தகங்களே "நூல்' என்று போற்றப்படும். இத்தகைய நூல்கள் ஒரு நாட்டின் பண்பு நலனைமதிப்பீடு செய்ய உதவும் துலாக்கோலாகச் செயல்படுகின்றது. தமிழ் மொழியில்,மாந்தர் தம் மனக் கோட்டம் தீர்த்து குணக் குன்றில் ஏற்றவல்ல ஏராளமானஇலக்கியங்கள் மின்னி மிளிர்கின்றன. அவற்றை ஒரு பருந்தின் பார்வையில்காணப்புகுவோம்.

கடல் கொண்ட முச்சங்கங்கள்:

மதுரை, கபாடபுரம் ஆகிய இடங்களில் முச்சங்கங் கள் வைத்து முத்தமிழ்வளர்த்தனர் நம் முன்னோர். முரஞ்சியூர் முடி நாகராயர், தொல்காப்பியர்,நக்கீரர் முதலான புலவர்களின் நாவில் நவிலப்பட்ட நற்றமிழ் நூல்கள் ஏராளம்!ஏராளம்!!. கி.மு. 2387-இல் கற்பனைக் கும் எட்டாத "பிரளயம்' ஒன்று உலகில்நிகழ்ந்தது. சீற்றம் கொண்ட ஆழிப் பேரலைகள் முன் உலகின் மிக உயரமான இமயமலைகூடக் கண்ணுக்குப் புலனாக வில்லை. வீசி எறியப்பட்ட கடல்பொருள்களில் பலஉயரமான இமயமலையில் சிக்கி, தங்கி, உறைந்து, படிவங்களாக மாறிப் போயுள்ளன. அதன் பின்னர் கி.மு. 504 மற்றும் கி.மு. 306-இல் நிகழ்ந்த அடுத்த இருகடல்கோள்கள் என முப்பெரும் கடல்கோள்கள் தெற்கே பரந்து விரிந்திருந்ததமிழகத்தையே வழித்து வாரிக் கொண்டு போன நிலையில், எண்ணிறந்த பல தமிழ்நூல்களும் கடல்வாய்ப்பட்டு அழிந்தன. முச்சங்க நூல் களுள் சிலவாகியமுதுநாரை, முதுகுருகு, களரியாவிரை, மாபுராணம், பூத புராணம், இசைநுணுக்கம், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை, பெருங்கலி, வெண்டாழி, வியாழமாலை, அகவல் என்னும் நூல்கள் பற்றிய குறிப்பு இறை யனார் களவியல் உரை யின்மூலம் வெளிப்படுகின்றது. கடல் கோள் களில் எஞ்சிய நூல்கள் தொல்காப்பியம்,பரி பாடல், நெடுந்தொகை (அகநானூறு), குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு,ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை ஆகியனவே.

எட்டுத்தொகை நூல்கள்

மேற்காண் நூல்களுள் தொல்காப்பியம் நீங்கலான எட்டு நூல்களும், "எட்டுத்தொகை'நூல்கள் எனப்படும். எட்டுத் தொகையின் ஒவ்வொரு நூலும் பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு. எட்டுத் தொகையுள் "பதிற்றுப்பத்து'என்னும் பத்துச் சேர மன்னர்களைப் பத்துச்சேரநாட்டுப் புலவர்கள்பாடியது.சேரநாடுஎன்பது இன்றையகேரளா! தமிழிலிருந்து தெலுங்கு, கன்னட மொழிகளுக்குப்பிறகுகடைசியாகப் பிரிந்த தென் திராவிட மொழியான மலையாள இலக்கியத்தின் மூத்தநூலான பதிற்றுப்பத்து, தமிழ் எழுத்து வடிவத்திலேயே சங்க எட்டுத் தொகையுள் ஒன்றாக இருப்பது தமிழின் தொன்மையையும், மலையாளத்தின் "பின்மை'யையும் உணர்த்தும் ஆவணம் எனலாம்.

பத்துப்பாட்டு நூல்கள்

திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறு பாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல் வாடை,குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலை படுகடாம் (கூத்தராற்றுப் படை)என்னும் பத்து நூல்களும் கடல் கோள்களுக்குப் பின்னர் நிறுவப்பட்ட சங்கத்துநூல்கள். இவற்றுள் ஒவ்வொரு நூலும் ஒரு மன்னரை புலவரொருவர் பாடிய பாங்கில்அமைந்துள்ளன. "பேராசிரியர்' (கி.பி.13) என்னும் உரையாசிரியரே இப்பத்துநூல்களையும் ஒன்றாகச் சேர்த்து "பத்துப்பாட்டு' என முதன்முதலில் இனம்காட்டினார். இப்பத்து நூல்களுள் செம்பாகி ஆற்றுப் படை நூல்கள்.இவ்வாற்றுப்படை நூல்கள் இன்றைய "பயண இலக்கியத்தின் முன்னோடி'யாகத்திகழ்கிறது.

திணை இலக்கியங்களும் வீரநிலை இலக்கியங்களும்

பொதுவாக சங்க இலக்கியங்களை அக இலக்கியங் கள், புற இலக்கியங்கள் என இருவகையாகப் பகுக் கலாம். அக நூல்களில் குறிப்பிட்ட எவரின் பெயரும்குறிக்கப்படாமல் அகச்செய்திகளை மட்டும் கூறும் மாண்புகாக்கப்பட்டிருக்கும். அக இலக்கியங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைகளின் அடிப் படையில் பாடப்பட்டுள்ளதால்"திணை இலக்கியங்கள்' எனப் போற்றப்படுகின்றன: வெட்சி, கரந்தை, வஞ்சி,காஞ்சி, நொச்சி, சழிஞை, தும்பை, வாகை என்னும் போர்முறை களைப் பாடுவதால்புறப்பாடல்கள் "வீரநிலை இலக்கியங்கள்' எனச் சிறப்பிக்கப்படுகின்றன.

காப்பிய நூல்கள்

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் கூறுவன பெருங்காப்பியங்கள். வீடு நீங்கலாக ஏனையவற்றைக் கூறுவன சிறுகாப்பியங்கள்.கி.பி. 2-9- இல் ஐம்பெருங்காப்பியங்களும், கி.பி. 6-16-இல்ஐஞ்சிறுங்காப்பியங்களும் தோன்றின. காப்பிய வகைக்கு வித்திட்ட இளங்கோவடிகளின் சிலம்பும், சாத்த னாரின் மேகலையும் முதல் தமிழ்க் காப்பியங்களாவதோடு பெண்ணின் பெருமை பேணும் காப்பியங்களாகவும் மிளிர்கின்றன. இவற்றோடு சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசியும் சேர்ந்து ஐந்தும்  பெருங்காப்பியங்கள். நீலகேசி, சூளாமணி, யசோதர காவியம், உதயண குமாரகாவியம், நாககுமார காவியம் என்பன ஐஞ்சிறுகாப்பியங்கள். இவற்றுள்மேகலையும், குண்டலகேசியும் மட்டும் பௌத்த சமயத்தைப் பாட ஏனைய 8காப்பியங்களும் சமணம் போற்றுகின்றது. இது, அக்கால கட்டத்தில் சமணம் பெற்றிருந்த செல்வாக்கைச் சுட்டுகிறது. ஐம்பெருங்காப்பியப் பட்டியலுக்குள் வராவிட்டாலும் பெருங்கதை (கி.பி. 6) பெருங்காப்பிய வரிசையுள் மூன்றாவதாக வரிசைப்படுத்தத் தக்க சிறப்புடையது. கம்பரின் கம்பராமாயணத்தை அடியொற்றிஇரகுவம்சம் (கி.பி. 15), இராமாயண நூல் களுக்கு மறுதலையாக எழுந்த புலவர் குழந்தையின் இராவண காவியம் (கி.பி. 1946) தமிழர்ப் பண்பாட்டைப் பேணுவதற்காகவே எழுந்தது. இவற்றைத் தொடர்ந்து 20-ம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியங்களுள் கண்ணதாசனின் இயேசு காவிய மும், சிற்பியின் "மௌன மயக்கமும்' கவிஞர்வைரமுத்துவின் "கவிராஜன் கதை'யும் குறிப்பிடத்தக்கன.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

காலம் ஏறக்குறைய 4 (அ)-ஆம் நூற்றாண்டு கணக்கு = நூல். 50 முதல் 500 முடியஅதிக அடிகளைக் கொண்ட நூல் மேற்கணக்கு நூல்கள். அவற்றைவிடக் குறைந்தஅடிகளைக் கொண்டவை கீழ்க்கணக்கு நூல்கள். கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது,ஐந்திணை எழுபது, திணை மொழி ஐம்பது, திணை மாலை நூற்றைம்பது, கைந்நிலைஎன்னும் ஆறும் அகநூல்கள்: பொய்கையார் பாடிய களவிழி நாற்பது மட்டும்புறநூல்: ஏனைய நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது,முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக்கோவை, பழ மொழி, சிறுபஞ்சமூலம்,முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்னும் 11 நூல்களும் அறநூல்கள். இவற்றுள்திருக் குறள் "உலகப் பொது மறை' என்னும் அரியணை ஏறியது.பதினொண்கீழ்க்கணக்கின் அறநூல்கள் அடியாற்றிப் பிற்காலத்தில் பல அறநூல்கள்எழுந்தன. ஔவையாரின், கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, ஆத்திசூடி முதலியனவையும் அறநூல்கள். ஔவையின் ஆத்தி சூடியைப் பின்பற்றி பாரதி, பாரதிதாசன் முதல் வாணிதாசன் முடிய ஒன்பதின்மர் "ஆத்திசூடி வகை' நூல்களை இயற்றியுள்ளனர். மேலும், உலகநீதி, நீதிநெறி விளக்கம், பெண் மதிமாலை முதலானவும் அறநூல்களாக அணி செய்கின்றன.

இலக்கண நூல்கள்

இலக்கணம் என்பது மொழியின் வேலி. நமக்கு முழுமையாக கிடைக்கும் முதல் இலக்கணநூல் தொல் காப்பியமே. அகத்தியரை முதன்மைப்படுத்திக் கூறும் மனப் போக்கு,அவரைத் தொல்காப்பியரின் ஆசிரி யர் எனவும், அவரது அகத்தியம்தொல்காப்பியத்தின் மூலநூல் எனவும் கூறலாயிற்று: ஆயின் "அதங் கோட்டாசான்'என்பவரே தொல்காப்பியரின் ஆசிரியர் என்பதனைத் தொல்காப்பியம் பாயிரம் பதிவுசெய்துள்ளது. கி.பி. 5-ஐச் சேர்ந்த தொல்காப்பியத்தைத் தொடர்ந்து பவணந்திமுனிவரின் "நன்னூ'லும் (கி.பி. 12) சொல்லமைப்புகளை ஆராயும் "இலக்கணக்கொத்து'ம் (கி.பி. 17) இயற்றப்பட்டன. தமிழர்க்குப் பெருமை சேர்க்கும் அகஒழுக்கங் களைப் பற்றிய இலக்கணங்கள் கி.பி. 8-16-இல் தோன்றின. இவற்றுள் இறையனார் அகப்பொருள் (கி.பி. 8) குறிப் பிடத்தக்கது. ஐயனாரிதனாரின் "புறப்பொருள் வெண்பாமாலை' (கி.பி. 9)-யில் தான் "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துவாளொடு, முன்தோன்றி மூத்தகுடி' என்னும் வரிகள் இழை யோடுகின்றன. செய்யுள்இயற்றுவதற் குரிய யாப்பிலக்கணங்களை அவி நயம் (அவி நயனார்), யாப்பெருங்கலம்மற்றும் யாப்பருங்கலக்காரிகை (அமித சாகரர்)யும், செய்யுள் அணிகளைக் கூறும்தண்டியலங்காரம் (கி.பி. 12) நூலும் எழுந்தன. இத்தாலி நாட்டின ரானவீரமாமுனிவரின் "தொன்னூல் விளக்கம்' ஐந்திலக்கணங்களைக் கூறுவது. தமிழின்யாப்பு வடிவங் களைப் "பாட்டியல் நூல்கள்' நவிலு கின்றன. இவை போக, சொல்லின்பொருள்களை விளக்கும் 67 நிகண்டுகள் தமிழில் உள்ளன என்பர். திவாகரர்இயற்றிய திவாகரம் "முதல் நிகண்டு' எனப் போற்றப்படுகிறது. காலப்போக்கில்நிகண்டுகள் உரைநடை வடிவில் அகராதிகளாக உருமாற்றம் பெற்றன. வீரமாமுனிவரின்"சதுர்அகராதி' புகழ் பெற்றது. சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி"லெக்சிகன்' எனப்படுகிறது. இலக்கணக் கூறுகளை அகர வரிசையில் வை.மு.கோபாலய்யர் 25 ஆண்டு களாகப் பாடுபட்டு உருவாக்கிய 17 தொகுதிகளைக் கொண்ட"தமிழ் இலக் கணப் பேரகராதி' 2005-இல் வெளியிடப்பட்டது.

தொன்ம இலக்கியங்கள்

தொன்மை வாய்ந்த பழங்கதைகளைக் கூறும் புராணங்கள் கி.பி. 11-இல் தோன்றின.கல்லாடம் சிவ பெருமானின் திருவிளையாடல்களைக் கூறும் முதல் புராணநூல்,தொன்மங்களில் பெரியபுராணமும்  (சேக் கிழார்), கந்தபுராணம் (கச்சியப்பமுனிவர்) புகழ் வாய்ந்தன.

சமயங்கள் வளர்த்த தமிழ்

தமிழ் இலக்கியங்கள் ஒவ்வொன்றும் ஏதாவதொரு சமயப் பெருமையைப் பேச உதவும் கருவியாகவே ஆளப்பட்டு வந்திருப்பது கண்கூடு. பாரதிதாசன்தான் "அழகின்சிரிப்பு' மூலம் இம்மரபினை உடைத்தார் எனலாம். கி.மு. 5-இல் தோன்றியபௌத்தக் கருத்து களை மணிமேகலை, குண்டலகேசி, வீர சோழியம் முதலான நூல்கள்எடுத்துரைக்கின்றன. கி.பி. 3-இல் தோன்றிய சமண சமயப் பெருமையை "ஜைனஇராமாயணம்' மேரு மந்திரபுராணம்' சிலம்பு, வளையா பதி, பெருங்கதை முதலானஇலக்கியங்களும், ஐஞ்சிறு காப்பியங்களும் பேசுகின்றன. கி.பி. 7,8,9-இல்சோழர் கட்டிய சிவாலயங்கள் 63 "நாயன்மார்' மூலம் சைவத்தை வளர்த்தன. தேவாரம், திருவாசகம், திருமந்திரம், பெரிய புராணம் முதலான "பன்னிருதிருமுறைகள்' தோற்றம் கண்டன. ஏறக்குறை இக்காலகட்டத்தில் தோன்றிய வைணவம்"பன்னிரு ஆழ்வார்கள்' மூலம் நாலாயிர திவ்விய பிரபந்தங்களைத் தந்தது.மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும் ஆண்டாளின் திருப்பாவையும் மார்கழி மாதப்பாராயண நூல்களாகத் திகழ்கின்றன. வணிகப் பொருட்டு நுழைந்த மேலை நாட்டினருள்இத்தாலியைச் சேர்ந்த ஜோசப் பெஸ்கி செய்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்மூலம் "வீரமாமுனிவர்' எனப் போற்றப்படுகிறார். இவரது "தேம்பாவணி'யும்" பரமார்த்த குருகதை'யும் சிறப்புடையன. இன்னும் அகராதிகள், ஒப்பிலக்கணங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், சுவடிப் பணிகள், கிறித்தவரின்தமிழ்ப் பணிக்குச் சான்றுகளாக நிலவுகின்றன. கி.பி. 14-இல் தமிழகத்தில்படையெடுத்த "மாலிக்காபூர்' மூலம் இஸ்லாமியத் தாக்கம் எழுந்தது. அதன் மூலம்உமறுப்புலவரின் சீறாப்புராணம் தமிழுக்குக் கிடைத்தது. சிற்றிலக்கியங்கள்,சூபி, முனா ஜத்து, நாமா இலக்கிய வகைமைகளில் பல இஸ்லாமிய நூல்கள்இயற்றப்பட்டன. நபிகள் நாயகம் வரலாற்றை அப்துல் ரஹீம் "நாயகம் காவியம்'எனவும், கவிஞர் மேத்தா "நாயகம் ஒரு காவியம்' எனவும் காப்பியங்களாக்கியுள்ளனர்.

சிற்றிலக்கியங்கள்

மாலிக்காபூரின் படையெடுப்பும், விஜய நகரப் பேரரசின் ஆட்சிமுறையும் காப்பியசருவாக்கங்களை நிறுத்தித் தனி மனிதப் போற்றலை வளர்த்தன. இதன் விளைவாக 96வகைச் சிற்றிலக்கியங்கள் தோற்றம் கண்டன. ஆற்றுப்படை, பிள்ளைத் தமிழ், உலா,தூது, கலம்பகம் முதலாயின அவற்றுள் சில.

சித்தர் இலக்கியங்கள்

அணிமா, மகிமா, கிரிமா, இலகிமா, பிராப்தி, பர காமியம், ஈசத்துவம்,வசித்துவம் என்னும் எட்டுவகைச் சித்துக்களில் வல்லவர்கள் சித்தர்கள். 18,108, 1008 என்னும் எண்சிறப்பு முறை அடிப்படையில் "பதினெண் சித்தர்கள்' எனவரையறுக்கப் படுகின்றனர். திருமூலர், சிவாக்கியர், பட்டினத்தார் முதலானோர்அவர்கள். இவர் தம் நூல்களில் மெய்யுணர்தலும், இரைத் தேடலும், மருத்துவ,பச்சிலைக் குறிப்புகளும் பொதித்துள்ளன.

இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள்

மேலை நாட்டினர் தொடர்பால் இந்நூற்றாண்டில் இலக்கியங்கள் பன்முகப்பார்வையுடன் பல்வேறு வகைமைகளுக்குத் தோற்றம் தந்து ஏற்றம் கண்டு வருகின்றன. பாரதியார், பாரதிதாசன், கவிமணி, நாமக்கல் கவிஞர், சுரதா,கண்ணதாசன் முதலானோருடன் சிற்பி, வைரமுத்துவின் மரபுக் கவிதைகள் இருபதாம்நூற் றாண்டின் தொடக்க காலத்தை அணி செய்தன. வீரமா முனிவரின் (கி.பி. 18)பரமார்த்த குருகதை "தமிழ்ச் சிறு கதைகளின் முன்னோடி'யாகத் திகழ்கிறது.வ.சே.சு. ஐயரின் குளத்தங்களை அரசமரம் "முதல் தமிழ்ச் சிறு கதை' எனலாம்.புதுமைப்பித்தன், கல்கி, ஜெயகாந்தன், கு.ப.ரா. இராஜம்கிருஷ்ணன் முதலானோர்சிறுகதை உல கில் தடம் பதித்தவர்கள். பத்திரிகைகளின் வாயிலாகப் பெருகியசிறுகதைகள் "அரைப்பக்கச் சிறுகதை'களைக் கண்டு "ஒரு நிமிடச்சிறுகதை'களையும் ஈன்றெடுத் துள்ளன. மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் "பிரதாபமுதலியார் சரித்திரம்' (1879) தமிழின் முதல் புதினம். இராஜம்ஐயர்,அ.மாதவையாவின் புதினங்களும் "சரித்திரங்கள்' என்றே குறிக்கப்பட்டன. ஆரணிகுப்பு சாமி, தேவன், தமிழ்வாணன் வாயிலாகத் துப்பறியும் புதினங்கள்அறிமுகமாயின. வினோ, மீண்டும் ஜினோ முதலான புதினங்களின் மூலம் சுஜாதாஅறிவியல் புதினங்களை வித்திட்டார். அகிலன், மு.வ. நா. பார்த்த சாரதிமுதலானோர் சமூகப் புதினங்களை வளர்த் தெடுத்தனர். கல்கி, சாண்டில்யன்,மு.மேத்தா, கலைஞர், பூகண்ணன் முதலானோர் வரலாற்றுப் புதினங்களைப்புனைந்தனர். இலஷ்மி, சிவசங்கரி, இராஜம் கிருஷ்ணன் முதலான பெண்எழுத்தாளர்கள் புதின உலகில் தடம் பதித்தோராவர். கள ஆய்வுப் புதினங்கள்( கூட்டுக் குஞ்சுகள்) தருவதில் இராஜம் கிருஷ்ணன் தேர்ச்சி மிக்கவராகவிளங்குகிறார்.

மரபுக் கவிதையின் யாப்புக் கட்டுக்களை உடைத்து உருவானவை புதுக்கவிதைகள்.ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, அப்துல் ரகுமான், சிற்பி, மு.மேத்தா, மின்னூர்சீனி வாசன், பொன். செல்வகணபதி, ஈரோடு தமிழன்பன் முதலானோர் புதுக்கவிதைஉலகில் குறிப்பிடத்தக்கோர். மு.மேத்தாவின் "ஆகாசத்துக்கு அடுத்த வீடு'சாகித்திய அகாதெமி பரிசு பெற்றது. புதுக்கவிதையின் எளிய வடிவம் ஹைக்கூ.ஜப்பானிய இறக்குமதி. அமுத பாரதி, அறிவுமதி முதலானோர் ஹைக்கூ கவிஞர்கள்.ஹைக்கூவின் இறுக்கம் குறைந்த வடிவம் சென்ரியூ. ஈரோடு தமிழன்பனின் "ஒருவண்டி சென்ரியூ' தமிழின் முதல் சென்ரியூத் தொகுப்பு நூல் என்னும் சிறப்பினைப் பெறுகிறது. ஹைக்கூவைத தமிழ்ப் படுத்திய வடிவம் குக்கூ. மீ.ரா-வின்"குக்கூ' என்னும் நூலே முதல் குக்கூ-வின் தொகுப்பாக உள்ளது.

அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு என மு.வ. எழுதிய கடித இலக்கியங்கள்அரசியல் சார்ந்த கடித இலக்கியங்களுக்கு வழிகோலின எனலாம். தனிநாயகஅடிகளார், மு.வ, வ.சுப. மாணிக்கம் (தமிழ்க்காதல்), க.கைலாச பதி (வீரயுகப்பாடல்) முதலானோர் ஒப் பிலக்கியங்கள் காண வழிவகுத்தனர். அயல்நாட்டு வணிகத்தொடர்பும், அரசியல், அறிவியல் கலப்பு களும் மொழிக்கலப்பை உருவாக்கியதன்மூலம் ஒப் பிலக்கணம் உருவெடுத்தது. நூல்களை மதிப்பீடு செய்யும் திறனாய்வுநூல்களும், மொழிபெயர்ப்பியதும், நாட்டுப்புறவியலும், குழந்தை இலக்கியங்களும், பயண இலக்கியங்கள், வாழ்க்கை வரலாற்று இலக்கியங்கள்,பெண்ணிய, தலித்திய, ஊடக இலக்கியங்கள் இன்னோ ரன்னவை இருபதாம் நூற்றாண்டுஇலக்கியங்களாக இலங்குகின்றன.

எதிர்வருங்காலத்தில் சட்டத்தமிழ், கணிப்பொறித் தமிழ், அறிவியல் தமிழ்,மருத்துவத் தமிழ், பொறியியல் தமிழ் எனத் தமிழ்க் கலைச் சொல்லாக்கங்கள்முழு வீச்சில் பன்முகப் பாங்கில் பரவலாக்கப்படல் வேண்டும். மேலும்உலகெங்களிலும் பல்வேறு பகுதிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள தமிழ் ஓலைச்சுவடிகள், கையெழுத் துப் பிரதிகள் முதலான தமிழ்க் கருவூலங்கள் தமிழகம்கொணரப்பட்டு அச்சில் ஏற்றப்படல் வேண்டும். தமிழ் நூல்கள் அனைத்தும்காக்கப்படல் வேண்டும்.

No comments:

Post a Comment